
கோவிட் தடுப்பூசிச் செலுத்தப்பட்ட பிறகு 14 வயது கொண்ட ஒரு சிறுமி மரணமுற்றச் சம்பவம் தொடர்பில் மிகவும் விரிவாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அம்னோ தலைவர், டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி வலியுறுத்தினார். நோய்த்தொற்றை முறியடிப்பதில் தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து நான் மறுக்கவில்லை, இருந்த போதிலும் இச்சம்பவம் சந்தேகத்தை எழுப்புகிறது. இச்சம்பவத்தைத் தனிப்பட்ட ஒன்றாகக் கருதி விட முடியாது. இது தொடர்பில் பொதுமக்களுக்கு விரிவான விளக்கமளிப்புத் தேவைப்படுகிறது. இதில் உடலின் மாதிரி திசுக்கான மருத்துவப் பரிசோதனை முடிவு வரும் 28ஆம் தேதிக்குள் கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையும் முடிந்த வரை நன்றாக ஆய்வுச் செய்ய வேண்டியது அவசியமாகும் என்றார்.
