
செல்வாக்கு பெற்ற நபர்கள் அயல் நாடுகளில் சேமிப்பு கணக்கை வைத்துள்ளதாக கூறும் பண்டோரா பேப்பர்ஸ் விவகாரத்தை விசாரிக்கும் முயற்சியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இரட்டிப்பாக்க வேண்டும் என்று பக்கத்தான் ஹரப்பான் கேட்டுக் கொண்டுள்ளது. அந்தப் பணம் சட்டப்பூர்வமான முறையில் பெறப்பட்டதா? அல்லது சட்டவிரோதமாகப் பெறப்பட்டதா? என்பதை கண்டறிய இந்த விசாரணை அவசியம் என்று பக்கத்தான் ஹரப்பான் வலியுறுத்தியுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பில் பண்டோரா பேப்பர்ஸ் அம்பலப்படுத்திய விவகாரம் தொடர்பில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேள்வியை எழுப்பியுள்ளார். இந்த பண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்கள் தொடர்பில் ஒரு குறிப்பிட்ட தேதியில் பதில் வழங்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ வான் ஜூனைடி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பில் விசாரணை முடிந்த பின்னர் அதன் பதிலை ஒரு குறிப்பிட்ட தேதியில் நாடாளுமன்றத்தில் தெரிவிப்பேன் என்று அவர் சொன்னார்.
