
பினாங்கின் தென் செபராங் பிறை மாவட்டத்தில், துண்டாடப்பட்ட நிபோங் திபால் கலிடோனியா தோட்டத்தில் பாதிக்கப்பட்டக் குடும்பங்களுக்கு மாற்று குடியிருப்புகளை வழங்க மாநில நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியின்படி,புதிய வீடுகளின் நிர்மாணிப்புப் பணிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
முதல் கட்டமாக கலிடோனியா தோட்டத்தில் வசிக்கும் சுமார் 70 குடும்பங்களுக்கு,ஒதுக்கப்பட்டுள்ள 15 ஏக்கர் நிலத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.அதன் கட்ட நிர்மாணிப்புப் பணிகள் எந்தவொரு தடையுமின்றி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்த நிர்மாணிப்பு திட்டத்தை நாட்டின் பிரபல மேம்பாட்டு நிறுவனமான எகோவேல்டு ஹோரிசோன் செண்டிரியான் பெர்ஹாட் மேற்கொண்டு வருகிறது.
மேம்பாட்டு திட்டங்களிலோ அல்லது துண்டாடாலிலோ தோட்ட மக்கள் பாதிக்கப்படாமல் நியாயமான அனுகூலங்களை பெற வேண்டும் என்பது பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமியின் சிந்தனையில் உதித்ததுதான் இந்த கலிடோனியா தோட்ட மக்களுக்கான வீடமைப்பு திட்டமாகும்.

பினாங்கு மாநில அரசாங்கம் மற்றும் துணை முதல்வரின் சிந்தனைக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்டு வரும் முதலாவது மற்றும் இரண்டாவது கட்ட தாமான் கலிடோனியா இண்டா திட்டங்கள் 2025 -ஆம் ஆண்டில் நிறைவுபெறுமென மேம்பாட்டு நிறுவன குழுமத்தின் தலைமை அதிகாரியும், துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ சுந்தரராஜு சோமு தெரிவித்தார்.
