
போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கானுக்கு ஜாமின் வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த, ‘பாலிவுட்’ நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், போதை பொருள் தடுப்பு படையினரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். கடந்த 20 நாட்களாக மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தாக்கல் செய்த ஜாமின் மனுவை, மும்பையில் உள்ள போதை பொருள் தடுப்பு நீதிமன்றம் இரண்டு முறை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. ஆர்யன்கானிடம் இருந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யப்படவில்லை. ஏற்கனவே 2 பேருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. ‘வாட்ஸ் ஆப்’ தகவல் பரிமாற்றத்தின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைதுக்கு சரியான காரணம் கூறப்படவில்லை என வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி வாதாடினார். இவரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட மும்பை உயர் நீதிமன்றம் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்க முன் வந்துள்ளது.
