
33,210 கோடி வெள்ளி 2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு 12 கோடி வெள்ளி என்று நிதியமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு ஷப்ருல் அறிவித்தார். நாட்டில் 527 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீனப் பள்ளிகள் இருக்கின்றன. அப்படியானால் இந்த 12 கோடி வெள்ளியில் எத்தனை கோடிதான் தமிழ்ப்பள்ளிகளுக்கு கிடைக்கும் என்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம் குலசேகரன் கேள்வியை எழுப்பினார். தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளுக்கு ஒட்டுமொத்தமாகப் 12 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்ப் பள்ளிகளுக்கு மட்டும் 10 கோடி வெள்ளியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஆனால் இப்போது அது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்த அவர் இந்த பட்ஜெட்டில் தமிழ்ப் பள்ளிகளுக்கு எவ்வளவு தொகை வழங்கப்படும் என்பதை கல்வியமைச்சு தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர் ஆணித்தரமாக வலியுறுத்தினார்.
