
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் எதிர்நோக்கியுள்ள 1எம்டிபி ஊழல் வழக்கில் கோபால் ஸ்ரீராமை அரசுத் தரப்புக் குழுவில் இருந்து நீக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மேற்கொண்ட முயற்சி மீண்டும் தோல்வி கொண்டிருக்கிறது. நீதிபதி யாக்கோப் சாம் தலைமையிலான மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழு இன்று டத்தோஸ்ரீ நஜிப்பின் விண்ணப்பத்தை ஒருமனதாக நிராகரித்தது. நீதிபதிகள் குழுவில், லீ ஹெங் சியோங் மற்றும் சே முகமட் ருஸிமா கஸாலி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 376 (3) பிரிவின்படி, மூத்த அரசு துணை வழக்கறிஞராக நியமிக்க ஸ்ரீராம் பொருத்தமான மற்றும் சரியான நபர் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். முன்னதாக, ஆகஸ்ட் 28ஆ-ம் தேதி, கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நஜிப் மேல்முறையீடு செய்தார். அந்த விசாரணையில், ஸ்ரீராமை அரசு வழக்கறிஞராக நீக்குவதில் நஜிப் தோல்வி கண்டார். இன்று அவரின் மேல் முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
