
மக்கள் பணத்தை சூரையாடியவர்களிமிருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும். பல முறைகேடுகளிலிருந்து மக்களை காப்பாற்றும் பொறுப்பு நமக்குண்டு என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டுள்ளார். அதில் நாம் தவறினால், தேசிய முன்னணி தொடர்ந்து வெற்றியடையும், மக்கள் ஊழல் வாதிகளின் கைகளில் மீண்டும் சிக்குவார்கள் என்று அவர் கடுமையாக எச்சரித்துள்ளார். தேர்தல் தோல்விகள் நமக்கு ஒன்றும் புதிதல்ல, தோல்விகளை கண்டு துவண்டு விட வேண்டாம், அதற்கு யார் மீதும் பழி சுமத்த வேண்டாம் என்று பெட்டாலிங் ஜெயா சிவிக் செண்டரில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில கெஅடிலான் கட்சியின் தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் விருந்து நிகழ்ச்சியில் உரையாற்றும்போது அவர் கேட்டுக் கொண்டார். கடந்த 2004 ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட்ட நாம் ஒரே ஒரு மக்கள் பிரதிநிதியை தான் பெற்றிருந்தோம். சபா மாநில தேர்தலில் தோல்வி கண்டோம், ஆனால் நாம் தொடர்ந்து போராடி வந்ததால், 2008ம் ஆண்டு பொதுத் தேர்தலில் சிலாங்கூரில் மட்டுமல்லாது, மற்ற ஐந்து மாநில ஆட்சிகளும் நமது கைக்கு வந்தன. நாம் சிலாங்கூரை தற்காக்க வேண்டும். இது, நமது கோட்டை என்பதை தொடர்ந்து நிலை நாட்ட வேண்டும் என வலியுறுத்தினார். சிலாங்கூரை பாதுகாத்துக் கொள்வதில் அனைவரும் முனைப்புடன் பணியாற்ற வேண்டும். இந்நாட்டின் நன்மைக்காக, மக்களின் நல்வாழ்வுக்காக கெஅடிலான் கட்சி அதன் தொடர் போராட்டத்தில் இருந்து பின்வாங்க முடியாது, பின்வாங்கக் கூடாது என அவர் வலியுறுத்தினார். செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் மற்றும் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் சிவராசா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த விருந்து உபசரிப்பில் பல சட்டமன்ற உறுப்பினர், கெஅடிலான் டிவிஷன் தலைவர்கள், கவுன்சிலர்கள் உட்பட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
