
நீதிமன்றம் ஒன்றும் கோப்பி கடை அல்ல என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை புத்ரா ஜெயா அப்பீல் நீதிமன்ற நீதிபதிகள் குழுவுக்கு தலைமை ஏற்றுள்ள நீதிபதி அப்துல் கரீம் அப்துல் ஜாலில் இன்று கடுமையாக சாடியுள்ளார். டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக தவறினார். நஜிப் ஜாமீன்தாரர் மற்றும் வழக்கறிஞர் ஒருவர் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராகினர். கோவிட் 19 நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருக்கமாக இருந்ததால் அவர் மற்றும் முதன்மை வழக்கறிஞர்கள் நீதிமன்றம் வரவில்லை என்று கூறப்பட்டது. இன்று வழக்கு நடைபெறுவது குற்றஞ்சாட்டப்பட்டவருக்கும் ஜாமீன்தாரருக்கும் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் நஜிப்புக்கு வழங்கப்பட்ட 20 லட்சம் வெள்ளி ஜாமின் ரத்து செய்யப்படும். மேலும் கைது ஆணையம் பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி அப்துல் கரீம் கடுமையாக எச்சரித்தார். இதனிடையே நாளை டிசம்பர் 8 ஆம் தேதி எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் ஊழல் வழக்கில் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீதான வழக்கில் அப்பீல் நீதிமன்றம் தீர்ப்பு கூறுகிறது. தனக்கு எதிராக கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் விதித்த 12 ஆண்டு சிறையும் 21 கோடி வெள்ளி அபராதமும் எதிர்த்து நஜிப் மேல் முறையீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
