
இந்திய கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டி மற்றும் டுவென்டி போட்டியில் விராட் கோலி கேப்டனாக இருந்தார். உலகின் தலைசிறந்த வீரரான விராட் கோலியின் பேட்டிங் திறன் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கேப்டன் பதவியில் இருந்து அவர் விலகுவது நல்லது என்று கூறப்பட்டது. அண்மையில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு பிறகு கேப்டன் பதவியை துறப்பதாக அவர் போட்டிக்கு முன்பே தெரிவித்தார். இதற்கிடையே ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்தும் விராட் கோலி விலகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. வரும் 2023-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் போட்டி உலக கோப்பையை கருத்தில் கொண்டு இந்திய அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்து உள்ளது. இதைத்தொடர்ந்து கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுமாறு விராட் கோலியை கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தி வந்தது. ஆனால் அவர் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக மறுத்து விட்டார். இதைத்தொடர்ந்து கேப்டன் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரோகித்சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
