
தேசிய ரத்த வங்கியில் ரத்தம் பற்றாக்குறையை ஏற்பட்டிருப்பதை கருத்தில் கொண்டு மலேசிய ஸ்ரீ குழந்தை வடிவேலன் திருப்பணி சபை ஏற்பாடு செய்த ரத்ததான முகாமில் 500-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கி பேருதவி புரிந்தனர் என்று அதன் தலைவர் கலைமாமணி பிரேமா கண்ணன் தெரிவித்தார். நோய்த்தொற்று தாக்கத்தினால் சிகிச்சை பெறுபவர்களுக்கு அதிகளவில் ரத்தம் தேவைப்படுவதால் தேசிய ரத்த வங்கியுடன் இணைந்து இவ்வாண்டில் 24 ஆவது ரத்ததான முகாமை செராஸ் இயோன் மால் பேரங்காடியில் ஏற்பாடு செய்தோம். செராஸ் இயோன் மால் பேரங்காடி நிர்வாகி திருமதி நளினி முழு ஆதரவு வழங்கினார். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற இந்த முகாமில் 500 க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கியது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது என்று அவர் சொன்னார். மனித உயிர்களை காப்பாற்ற பொதுமக்கள் தொடர்ந்து ரத்ததானம் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
