
தேசிய காற்பந்து குழுவின் முன்னாள் விளையாட்டாளரும் பயிற்சியாளருமான டத்தோ எம். குப்பன் நேற்று காலமானார். பண்டார் ஸ்ரீ டமான்சாராவிலுள்ள தமது சகோதரரின் வீட்டில் நேற்று பிற்பகலில் 84 வயதான குப்பன் இறந்தார். அண்மையக் காலமாக குப்பன் உடல் நலமின்றி இருந்து வந்ததாக அவரது இளைய சகோதரர் கேசவன் தெரிவித்தார். 1960 ஆம் ஆண்டுகளில் பினாங்கு மாநில காற்பந்து குழுவின் கேப்டனாகவும் பின்னர் தேசிய காற்பந்து குழுவின் முன்னணி ஆட்டக்காராகவும் குப்பன் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பினாங்கில் பிறந்து வளர்ந்தவரான குப்பன் 1958 ஆம் ஆண்டு மலேசிய கிண்ணத்தை பினாங்கு வெல்வதற்கும், பிறகு தேசிய காற்பந்து குழுவில் விளையாடியபோது 1958 ஆம் ஆண்டு மெர்டேக்கா கிண்ண காற்பந்து போட்டியில் மலேசியா வெற்றி பெறுவதற்கும் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார். 1965ஆம் ஆண்டுவரை சுமார் 8 ஆண்டுகள் மலேசிய காற்பந்து குழுவில் விளையாடியதோடு 10 ஆண்டுகள் பினாங்கு மாநில காற்பந்து குழுவுக்கும் குப்பன் விளையாடியுள்ளார்.
