
கோலாலம்பூர், ஜன.07: நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடர் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு அமர்வு ஜனவரி 20-இல் கூடுகிறது. இது குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் வெளியிட்ட அறிக்கையில் நாடளுமன்ற நிலை ஆணை 11(3)-இன்படி இந்த சிறப்பு அமர்வு உறுதிசெய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் வெள்ளம் மற்றும் வெள்ளத்துக்குப் பிந்தைய சூழ்நிலை, பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளை ஒருங்கிணைத்தல், வெள்ளப் பேரிடர் மேலாண்மையின் நீண்டகாலத் திட்டமிடல் போன்ற தேசிய நலன் சார்ந்த அம்சங்கள் விவாதிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
