
கோவிட் – 19 காலத்தில் அரசாங்கம் அறிவித்திருக்கும் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் உணவுக் கடைகளுக்கு அரசாங்கம் அறிவித்திருக்கும் வியாபார நேரம் அதிருப்தி அளிப்பதாக உணவுக் கடைகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வரும் 25.5.2021 தொடங்கி 14 நாட்களுக்கு உணவுக் கடைகள் காலை 8 .00 மணி முதல் இரவு 8 .00 மணி வரையில் செயல்பட அரசாங்கம் அறிவித்துள்ளது.
வழக்கம் போல காலை 6.00 மணிக்கெல்லாம் கடைகளை திறந்தால் தான் காலையில் வேலைக்கு செல்பவர்கள் உணவுகளை வாங்கிச் செல்ல முடியுமென நிபோங் திபால் பிக் போஸ் உணவகத்தின் உரிமையாளர் மோகனசுந்தரம் என்ற மோகன் கூறினார்.
அதிகாலையில் எழுந்து உணவுகளை தயாரித்து வைக்கும் போது,சுமார் 6.30 மணியிலிருந்து 7.00 மணிக்கெல்லாம் காலை வேலைக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் வந்து விடுகின்றனர் என்றார்.
அரசாங்கம் அறிவித்திருப்பது போல காலை 8 .00 மணிக்கு கடைகளை திறக்க நேர்ந்தால்,வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு,வருமானத்தையும் இழக்க நேரிடுமென என தென் செபராங் பிறை வட்டாரத்திலுள்ள இந்திய உணவுக் உணவுக் கடைகளின் உரிமையாளர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.
எங்களின் பிழைப்பு பாதிக்கப்படாமல் இருப்பதற்கு,காலை 6.00 மணிக்கு கடைகளை திறப்பதற்கு அரசாங்கம் அனுமதி அளிக்க வேண்டுமென இவர்கள் கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
