
இளம் வாக்காளர்கள் முதல் முறையாகவும் அதிக அளவிலும் பங்குபெற உள்ள ஜோகூர் சட்டமன்றத் தேர்தல் அரசியல்வாதிகளுக்கு சோதனைக் களமாக அமையும் என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு தெரிவித்துள்ளார். 21 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் 7 லட்சத்திற்கும்மேல் பதிவுபெற்றுள்ள நிலையில், ஜோகூரின் மொத்த வாக்காளர்களில் 30 விழுக்காட்டினராக இருக்கும் இளம் வாக்காளர்கள், தங்களின் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதித்துள்ள அடிப்படைப் பிரச்சனைகளை கவனத்தில் கொண்டு வாக்களிப்பார்கள். அரசியல் நிலையற்ற தன்மை, பொருளாதார சரிவு, வேலை வாய்ப்பின்மை ஆகியவற்றால் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ள இளையோர், தங்களின் எதிர்கால நலனை முன்வைத்து கவனமாகவும் எச்சரிக்கையாகவும் வாக்களிப்பார்கள். அதனால், ஜோகூர் தேர்தல் அரசியல்வாதிகளுக்கு பெரும் சோதனையாக அமையும் என்று ஜசெக களப்போராளியுமான சார்லஸ் தெரிவித்துள்ளார்.



