
ஜோகூர் மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து அம்மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் நியமனம் குறித்து உடனடியாக விவாதிப்பதற்கு அவசியமில்லை. தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ முடிவுகளை தேர்தல் ஆணையமான எஸ்.பி.ஆர் ஜோகூர் அரண்மனைக்கு அனுப்பியுள்ள வேளையில் மந்திரி புசார் நியமனத்தை முதலில் மேற்கொள்ள வேண்டும் என்று ம.சீ.சா தலைவர் டத்தோ ஶ்ரீ வீ கா சியோங் கூறினார். எனவே, இந்த விவகாரம் குறித்து கவலைப்படத் தேவையில்லை என்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் நியமனம் செய்வதற்கு முன்னர் முடிக்க வேண்டிய நடைமுறைகள் இன்னும் உள்ளதாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வீ கா சியோங் தெரிவித்தார். ஜோகூர் மாநிலத் தேர்தலில் அம்னோ, ம.சீ.சா. ம.இ.கா கூட்டணிகளின் ஒத்துழைப்போடு, தேசிய முன்னணி 56 சட்டமன்றங்களில் 40 இடங்களைப் பிடித்து அமோக வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது.
