
ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தமது காதலிக்கு மரணம் விளைவித்த குற்றத்திற்கான கட்டாய மரணத் தண்டனையை எதிர்நோக்கிய லாரி ஓட்டுநர் ஒருவர் தூக்குத் தண்டனையில் இருந்து தப்பித்திருக்கிறார்.புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம், அந்நபருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தது.நீதிபதி, டத்தோ நோர் பீ அரிஃபின் தலைமையிலான மூன்று நீதிபதிகள் குழு, 34 வயதான என். சந்திரசேகரனின் மேல்முறையீட்டை ஏற்று கொண்டு ஏகமனதாக அந்த தீர்ப்பை வழங்கியது.குற்றவியல் சட்டம், செக்ஷன் 302-டின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒதுக்கிய நோர் பீ, மேல்முறையீட்டாளரின் மேல்முறையீட்டில் திருப்தியடைந்ததைத் தொடர்ந்து, அதே சட்டம், செக்ஷன் 304 (a)-வின் கீழ் குற்றச்சாட்டையும் தண்டனையையும் மாற்றி தீர்ப்பளித்தார்.2016-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி, இரவு 11 மணியில் இருந்து பிப்ரவரி 28-ஆம் தேதி, காலை ஆறு மணிக்குள், சிம்பாங் பூலாய், லாடாங் செஙாட் கம்போங் பாத்து பெசியில் உள்ள ஒரு வீட்டில், 17 வயதான எஸ். துர்காதேவி எனும் தமது காதலியைக் கொலைச் செய்த குற்றத்திற்காக, 2018-ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதி, ஈப்போ உயர் நீதிமன்றம், சந்திரசேகரனுக்கு மரணத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
