
கொரோனா பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்களில் சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய்த் தொற்று பாதிப்பு அதிகமாக ஏற்பட்டு வருகிறது. இந்த நோய் தொற்று பாதிப்பிற்கு கோவையில் தனியார் ஆஸ்பத்திகளில் 9 பேரும், அரசு ஆஸ்பத்திரியில் 6 பேர் என மொத்தம் 15 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்தநிலையில், கருப்பு பூஞ்சை பாதிப்பை குணப்படுத்தும் மருந்தான ஆம்போடெரிசின் பி மருந்து கோவை அரசு ஆஸ்பத்திரி உள்பட எங்கும் இருப்பில் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இந்த மருந்து தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்திலும் இருப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கோவையில் கருப்பு பூஞ்சை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தவிர நோய்த் தொற்று பாதிப்பு குறைவாக இருக்கும் போதே தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் மருந்தை கொள்முதல் செய்து வழங்க வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நோய்த் தொற்றால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருவதால் அரசு உடனடியாக மருந்தை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா கூறியதாவது:-
கருப்பு பூஞ்சை நோய்த் தொற்றுக்கான ஆம்போடெரிசின் பி மருந்து அரசு சார்பில் விநியோகம் இல்லை. தனியார் மருந்தக நிறுவனங்களில் கொள்முதல் செய்யலாம் என்றாலும், அங்கும் இந்த மருந்து கிடைக்கவில்லை. இதனால் தற்போது கருப்பு பூஞ்சை நோய்த் தொற்று அறிகுறிகள் உள்ளவர்களுக்கு பூஞ்சை நோய்த் தொற்றுக்கான ஆன்டிபயாடிக் மருந்துகள், வேறு ஏதும் பிரச்னைகள் இருந்தால் அதற்கேற்ற சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.
நோய்த் தொற்றின் வீரியத்தை குறைப்பதற்கு ஆன்டிபாக்டீரியல், ஆன்டி இன்ப்ளமேட்ரிக் உள்பட மருந்துகள் அளிக்கப்படுகிறது. மேலும், ஆம்போடெரிசின் பி மருந்தினை அளிக்க வேண்டும் என அரசிடம் கேட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
