
17 வயதான சித்தி நோர் அஸிஸா ஷாப்ரி அடியும் அந்தப் பெண்ணின் தோழனும் சேர்ந்து உணவு விநியோகத்தில் ஈடுபட்டிருந்த வேளையில், மூன்று கொள்ளையர்களால் தாக்கப்பட்டனர். இதனால், சித்தி நோர் தன் வலது கையை முற்றாக இழந்தார்.
“இனி அழுது பயனில்லை; வருந்துவதாலும் நான் இழந்த கை இனி வரப்போவதில்லை. நான் விரும்புவதெல்லாம், என்னை ஏன் இப்படி செய்தீர்கள்” என்பதற்கான விடையும் நீதியும்தான் என்று சித்தி நோர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தத் துயரை எதிர்கொண்ட மகள் சித்தி நோருக்கு மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம்- UiTM, மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம்-UTM, ஒரு தனியார் நிறுவனமான முப்பரிமான அச்சகம் ஆகியவை இணைந்து செயற்கை கையை வழங்க முன்வந்திருப்பதாக தாயார் 39 வயதான Roslinawati Ya தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூர், கூச்சிங் சாலையில் சித்தி நோரும் அவரின் நண்பரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, கொள்ளையர்களால் உதைக்கப்பட்டதால் நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலைத் தடுப்பில் மோதியது; இதனால், நோரின் வலது கை முழுவதுமாக, தோள் பட்டையில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.
