24.7 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா: கோவையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வருகிற 31-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும், ஊர்வலம் நடத்தவும் அரசு தடை விதித்தது. இதனால் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டது. பெரிய அளவிலான சிலைகளை தயாரிக்கவில்லை. ஒரு அடி முதல் 3 அடி வரையிலான சிலைகள் தயாரிக்கப்பட்டது. இந்த நிலையில் நடப்பாண்டில் இந்த தடைகளை நீக்க வேண்டும். ஊர்வலம் நடத்த அனுமதிக்க வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளதால் சிலைகள் வைக்க அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி நெருங்கி வருவதால் கோவை தெலுங்குபாளையம், சுண்டக்காமுத்தூர் உள்ளிட்ட பகுதிளில் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. புதிய வடிவிலான விநாயகர் சிலைகளை வடிவமைக்கும் பணிகளில் சிலை வடிவமைப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த சிலைகள் கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, நீலகிரி, உடுமலை உள்பட பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சிறிய அளவில் களிமண்ணால் செய்த சிலைகள் ரூ.250, காகித கூழில் செய்த சிலைகள் ரூ.50க்கும் விற்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சிலைகள் அனைத்தும் சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தயாரிக்கப்பட்டு வருவதாக சிலை வடிவமைப்பாளர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து விநாயகர் சிலை தயாரித்து வரும் தெலுங்குபாளையத்தை சேர்ந்த சக்திவேல் முருகன் கூறியதாவது:- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதமே பணிகளை தொடங்கி விட்டோம். கோவை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்து ஆர்டர்கள் வருகின்றன. நாங்கள் விநாயகர் சிலைகளை பேப்பர் கூழ், வாட்டர் கலர், ஓடக்கல் மாவு, கிழங்கு மாவுகளில் விநாயகர் சிலைகள் தயாரித்து வருகிறோம். இங்கு தயாரிக்கப்படும் சிலைகள் திருப்பூர், ஈரோடு, அவினாசி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு விநாயகர் சிலைகளை வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இதுதவிர அண்டை மாநிலமான கேரளாவுக்கும் அதிகளவில் அனுப்பி வருகிறோம். முன்பு 10 முதல் 15 அடிகள் வரை சிலை செய்து வந்தோம். தற்போது பொது இடங்களில் 7 அடிக்கு மேல் சிலைகள் வைக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது 7 அடி சிலைகள் மட்டுமே தயாரித்து வருகிறோம். விநாயகர் சிலைகள் ரூ.1000 முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனையாகிறது. சிலை செய்வதற்கு தேவையான பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் விநாயகர் சிலைகளின் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த 2 வருடங்களாக விநாயகர் சிலைகள் விற்பனை பெரியளவில் இல்லை. இந்த ஆண்டு வியாபாரம் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles