
15 – ஆவது பொதுத் தேர்தலில் அம்னோ தலைவர் அகமட் ஸாஹிட் ஹமிடி எங்கு போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடவிரும்புவதாக முன்னாள் துணைப்பிரதமர் துன் டாக்டர் இஸ்மாயிலின் மூத்த புதல்வர் தவ்பிக் இஸ்மாயில் ( TawfiK Ismail ) சூளுரைத்துள்ளார். Gerak Independent எனப்படும் சுயேச்சை வேட்பாளர்களின் சார்பில் பேரா , பாகான் டத்தோவில் தாம் போட்டியிடவிரும்புவதாக தவ்பிக் இஸ்மாயில் கூறினார். பாகான் டத்தோவில் மட்டுமின்றி ஸாஹிட் ஹமிடி எங்கு போட்டியிட்டாலும் தாம் போட்டியிடப் போவதாக அவர் தெரிவித்தார். அனைத்து முறைகளையும் ஸாஹிட் சீரழித்துவிட்டார் . ஊழலை வெறுக்கும் அனைத்து மலேசியர்களும் அவர்களது போராட்டமாக தாம் ஸாஹிட்டை எதிர்த்து போராடுவதை பார்க்க வேண்டும் என தவ்பிக் இஸ்மாயில் வலியுறுத்தினார்.
