
🔊To listen to this news in Tamil, Please select the text.
பெர்சத்துவின் வங்கிக் கணக்கை தற்காலிகமாக முடக்கத் தாம் உத்தரவிடவில்லை என்றும் அதனை சுயேச்சையாக இயங்கும் ஊழல் தடுப்பு ஆணையமே மேற்கொண்டதாகப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
கோவிட் பெருந்தொற்று காலத்தில், பெரிக்காத்தான் அரசு பெரும் தொகையிலான நிதியைச் செலவிட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் பெர்சத்துவின் வங்கிக் கணக்கில் 30 கோடி ரிங்கிட் குறுகிய காலத்தில் வரவு வைக்கப்பட்டதையும் எம்ஏசிசி விசாரணை செய்வதால், அக்கட்சியின் வங்கிக் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
லஞ்ச ஊழல் எங்கு நடந்தாலும் எம்ஏசிசி தக்க நடவடிக்கையை எடுக்கப் பணிக்கப்- பட்டிருப்பதாகவும் கை சுத்தமானவர்கள் என மார் தட்டும் பெர்சத்து தலைவர்கள் அரசின் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளைக் கூறாமல், முறைகேடுகளுக்குத் தக்க பதிலைச் சொல்ல வேண்டுமென்றும் அன்வார் வலியுறுத்தினார்.



