
சிலாங்கூர் மாநிலத்தில் கட்டப்பட்டிருக்கும் பிஜே எஸ்-1 புதிய தமிழ்ப்பள்ளி அடுத்த ஆண்டு திறக்கப்படும் என்று புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் தெரிவித்தார்.
சுமார் 90 லட்சம் வெள்ளியில் கட்டப்பட்டிருக்கும் இந்த புதிய தமிழ்ப்பள்ளி கம்பீரமாக காட்சி அளிக்கிறது.
மொத்தம் 24 வகுப்பறைகள், மண்டபம், கணினி அறைகள் உட்பட அனைத்து வசதிகளும் இந்தப் பள்ளி கொண்டிருக்கிறது ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை 700 மாணவர்கள் படிக்கும் வசதியை இந்தப் பள்ளி கொண்டிருக்கிறது. கடந்த 2013ஆம் ஆண்டு இந்த பள்ளி கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது ஆனால் 2018ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிலாங்கூர் மாநில அரசு, மத்திய அரசு மற்றும் நில ஊலாகாவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 3.7 ஏக்கரில் பள்ளி கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்தப் பள்ளியின் கட்டுமானப் பணிகள் 95 விழுக்காடுகள் பூர்த்தி அடைந்து விட்டன. இன்னும் எஞ்சிய வேலைகள் மட்டுமே உள்ளன.
அடுத்த ஆண்டு திறக்கப்படும் இந்த புதிய தமிழ்ப்பள்ளியில் இந்த வட்டாரத்தைச் சேர்ந்த மாணவர்கள் பயிலும் வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.
