
🔊To listen to this news in Tamil, Please select the text.
காஜாங் போலீஸ் நிலையத்தில் பெர்மூடா உடையணிந்து புகார் கொடுக்கச் சென்ற பெண் ஒருவரை அங்கு நுழைய விடாமல் தடுத்த செயலைப் பல தரப்பினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அதனைத் தற்காத்துப் பேசியிருக்கும் போலீஸ் தலைவர் டான்ஸ்ரீ Acryl Sani Abdullah Sani (அக்ரில் சானி அப்துல்லா), அது அரசின் சுற்றறிக்கைக்கு உட்பட்டே எடுத்த முடிவென்று தெரிவித்திருந்தார்.
அது பற்றிக் குறிப்பிட்ட வழக்கறிஞர் மன்ற முன்னாள் தலைவர் Salim Bashir Bhaskaran (சலிம் பாஷிர் பாஸ்கரன்), பொதுமக்கள் தெரிவிக்கும் எந்தப் புகாரையும் போலீஸார் பெற்று, நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று குற்றவியல் சட்டம் தெளிவாகக் குறிப்பிடுவதால், அதில் உடையை முக்கியமாகக் கருதக் கூடாதென குறிப்பிட்டார்.
எவ்வாறு உடையணிவது என்பது ஒரு வழிகாட்டியே தவிர அது சட்டமில்லை. நமது கொள்கைகளை மற்றவர்களின் மீது திணிப்பது கூடாதென்றும் உடையணிவதன் வழிமுறை சமூகத்தின் வழக்கமாக ஏற்றுக் கொள்ளப்பட்டதன் அடிப்படையில் இருக்க வேண்டுமென பாஷிர் குறிப்பிட்டார்.
கற்பழிப்புக்கு உள்ளான பெண் அவஸ்தையோடும், மாறா மன அழுத்தத்தோடும் போலீஸ் நிலையத்திற்குச் சென்றால், உடையைக் காரணம் காட்டி அவரைப் போலீஸ் நிலையத்தில் அனுமதிக்க மறுப்பதில் நியாயம் இருக்க முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.



