
🔊To listen to this news in Tamil, Please select the text.
கடந்த காலத்தில் ஸ்ரீலங்காவின் பொருளாதார நலிவு அந்நாட்டைத் திவாலாக்கும் நிலைக்குத் தள்ளி, மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளானதை ஒரு பாடமாகக் கற்று, நம் நாட்டை சீரமைக்க எல்லா கட்சிகளும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டுமென முன்னாள் இரண்டாவது நிதியமைச்சர் Johari Ghani (ஜொஹாரி கனி) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நமது வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 11.1 விழுக்காடாகக் குறைந்து விட்டது. ஆனால், நமது அண்டை நாடுகளின் உற்பத்தியோ 14இல் இருந்து 22.7 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
2021இல் நமது மொத்த வருமானமே 22,100 கோடி ரிங்கிட் என்றும் இது 2017இல் கிடைத்த 22,000 கோடியை ஒத்திருக்கிறது. மேலும், நாட்டின் துண்டு விழும் பட்ஜெட் 4,030 கோடி ரிங்கிட் அதிகரித்து இப்போது அது 10,000 கோடியாக உயர்ந்துள்ளது.
நாட்டின் மொத்த கடனானது 1.5 டிரில்லியனாகவும் (ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடியாகும்) கடந்த 4 ஆண்டுகளில் அது 35,000 கோடி ரிங்கிட் அதிகரித்துள்ளது.
எனவே, இந்தப் பின்னடைவைச் சரி செய்ய அரசு சிறப்பானதொரு வியூகத்தை வரைய வேண்டுமென ஜொஹாரி கனி கேட்டுக் கொண்டார்.
