
🔊To listen to this news in Tamil, Please select the text.
தாய்மொழிப் பள்ளிகள் சமுதாயத்தில் பிரிவினையை ஏற்படுத்துவதாகக் கூறியிருக்கும் முக்ரிஸ் மகாதீர் அதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டுமென பினாங்கு துணை முதல்வர் டாக்டர் பி. ராமசாமி வலியுறுத்தியுள்ளார்.
நாட்டிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே தாய்மொழிப் பள்ளிகள் இங்கு செயல்படுவதை அரசமைப்பு விதி உறுதிப்படுத்தியும் கூட ஒரு திமிர் பிடித்த கூட்டம் அவற்றை துடைத்தொழிக்க வேண்டுமென மும்முரமாகச் செயல்படுகிறது. இப்போது முக்ரிஸ் மகாதீரும் அதில் இணைந்திருப்பது அரசியல் பிழைப்பு என ராமசாமி குத்திக் காட்டினார்.
தாய்மொழிப் பள்ளிகளை அகற்ற வேண்டுமென கொக்கரிப்போர், நாட்டின் வரலாற்றைத் தெரியாதவர்கள் என்றும் அவர் சாடினார்.
தாய்மொழிப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லையென்றும் அவர்களால் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படவில்லை என்று கூறுவது முட்டாள்தனம் என்றும் ராமசாமி சாடினார்.
தேசிய பள்ளிகளில் படித்த இப்போதைய மலாய் அரசியல் தலைவர்கள் ஒருவருக்கொருவர் மோதி, அச்சமூகத்தில் பிளவை உருவாக்குவது ஏன் என்று முக்ரிஸ் வெளிப்படையாக விளக்கம் அளிக்க வேண்டுமென்றும் டாக்டர் ராமசாமி அறிவுறுத்தினார்.



