
🔊To listen to this news in Tamil, Please select the text.
போதைப்பித்தர்களின் புகலிடமாக விளங்கிய குடில் ஒன்றை முற்றுகையிட்ட போலீசார் 18 ஆடவர்களைக் கைது செய்தனர். கிமாஸ் அருகே உள்ள பெல்டா ஜெராய் 4, ரப்பர் தோட்டம் ஒன்றில் நேற்று இந்த அதிரடிச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ் சாராங் நடவடிக்கையில் 23 முதல் 55 வயது வரையிலான அந்த 18 பேரும் கைது செய்யப்பட்டதாக தம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அனுவால் அப்துல் வஹாப் கூறினார்.
இந்த சோதனை நடவடிக்கையின் போது 301 கிராம் அடங்கிய ஆறு பாக்கெட் ஹெரோயின் மற்றும் 51.2 கிராம் எடையுள்ள நான்கு பாக்கெட் ஷாபு ஆகிய போதைப் பொருள்களும் கைப்பற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு 10,000 வெள்ளியாகும். அப்பகுதியை நாங்கள் முற்றுகையிட்ட போது சிலர் போதைப் பொருளைப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். மேலும் சிலர் போதைப் பொருளை விற்றுக் கொண்டிருந்தனர் என்றார் அவர்.
அந்த போதைப் பித்தர்கள் அந்த ரப்பர் தோட்டத்தை தங்களின் புகடலிடமாகப் பயன்படுத்தி வந்த தாக கூறிய அவர், கைது செய்யப்பட்டவர்களிம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர்கள் அனைவரும் போதைப் பொருளை உட்கொண்டுள்ளது கண்டறியப்பட்டது என்றார்



