
🔊To listen to this news in Tamil, Please select the text.
பிரதமர் பதவியேற்று ஐந்து மாதங்களுக்குப் பின்னர் அன்வார் இப்ராஹிமை கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றும் சதித் திட்டம் வரையப்படுவதாக வதந்தி உலவுகிறது.
தேசிய முன்னணி உறுப்பினர்கள் சிலரை எம்பி பதவியில் இருந்து சுயமாக விலக வைத்து, ஒற்றுமை அரசாங்கத்திற்கான ஆதரவை மீட்டுக் கொள்ள வைத்து, திடீர் தேர்தலை நடத்தி ஆட்சியைக் கைப்பற்றும் சதித் திட்டம் உருவாக்கப்படுவதாக அரசியல் வட்டாரத்தில் செய்தி பரவி வருகிறது.
ஒற்றுமை அரசாங்கத்திற்குப் பேராதரவு அளித்து வரும் அம்னோ தலைவர் அமாட் ஸாஹிட் ஹமிடியையும் சபா, சரவாக் அரசாங்கங்களையும் தூண்டிவிட்டு, ஆதரவை மீட்டுக் கொள்ள முடியாது என்ற நிலை இருப்பதால், கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்ற இந்தச் சதித்திட்டம் தீட்டப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
இத்திட்டத்தில் துன் மகாதீரும் முன்னாள் நிதியமைச்சர் டைம் ஸைனுடின் ஆகியோர் பின்புலமாகச் செயல்படுவதாகவும், அவர்கள் ஆட்சியிலிருந்தபோது, ஊழல் நடவடிக்கைகளில் கோடி கோடியாகப் பணம் சேர்த்ததை ஆராயப் போவதாக அன்வார் சூளுரைத்த பின்னர், அதிலிருந்து தப்பிக்கவே இந்தச் சதித்திட்டம் வரையப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
இத்திட்டத்தில், இதற்கு முன்னர் முஹிடினுக்கு ஆதரவாக சத்தியப் பிரமாண பத்திரங்களைத் தாக்கல் செய்த 10 தேசிய முன்னணி எம்பிகளான ஹிஷாமுடின் ஹுசேய்ன், ஹஸ்னி முகமட், ஜலால்டின் அலியாஸ், மசீச தலைவர் வீ கா சியோங், மஇகா துணைத் தலைவர் எம். சரவணன் ஆகியோர் பக்கபலமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
