
ஷா ஆலாம் LRT3 இரயில் சேவைத் திட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு கூட்டரசு நெடுஞ்சாலையில் நிலவிய கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், கிள்ளான், ஷா ஆலாம் மற்றும் கோலாலம்பூரை இணைக்கும் LRT3 திட்டத்தை தாம் முன்மொழிந்தபோது, அதற்கு எந்தவித தயக்கமும் இன்றி உடனடியாக ஒப்புதல் வழங்கிய அப்போதைய பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கிற்கு சுல்தான் தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
அதேவேளை, 2018ஆம் ஆண்டு பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் பதவியேற்ற பின்னர், இத்திட்டம் 18 மாதங்கள் தாமதமடைந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், திட்டத்தை மெகா திட்டமாக வகைப்படுத்தி அதன் செலவினங்களை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்ட அப்போதைய நிதியமைச்சர் லிம் குவான் எங் மற்றும் டிஏபி தலைவர் தோனி புவா ஆகியோரின் செயல்பாடுகளையும் சுல்தான் விமர்சித்தார்.
தற்போதைய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், திட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து முன்னெடுத்ததுடன், முன்பு இரத்து செய்யப்பட்ட ஐந்து LRT நிலையங்களை மீண்டும் அமைக்க ஒப்புதல் வழங்கியதற்கும், நிலையங்களைச் சுற்றி மலிவு விலை வீடுகள் அமைக்கும் திட்டத்திற்கு ஆதரவு அளித்ததற்கும் சுல்தான் பாராட்டு தெரிவித்தார்.
இறுதியாக, LRT3 திட்டத்தின் வெற்றிக்கு எந்த ஒரு தரப்பும் தனிப்பட்ட முறையில் உரிமை கோரக்கூடாது என வலியுறுத்திய சுல்தான், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் Prasarana நிறுவனம் இந்த இரயில் சேவையை திறம்பட பராமரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.



