
🔊To listen to this news in Tamil, Please select the text.
மலேசியாவுக்கும், சிங்கப்பூருக்கும் இடையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு தீர்வுக் காண, கோஸ்வே மற்றும் செகண்ட் லிங்க் நுழைவாயில்களிலுள்ள, சுங்க குடிநுழைவுத் துறை தனிமைப்படுத்தும் வளாகங்களுக்கு, தாம் இதுவரை எழுபதுக்கும் அதிகமான முறை நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளதாக, ஜொகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹபீஸ் காஜி தெரிவித்தார்.
குறிப்பாக, சுல்தான் அப்துல் சமாட் கட்டடத்தில் அமைந்துள்ள வளாகத்திற்கு 60 முறையும் சுல்தான் அபு பக்கார் கட்டடத்தில் செயல்படும் வளாகத்திற்கு பத்துக்கும் அதிகமான முறையும் தாம் பயணம் மேற்கொண்டதை, மாநில சட்டமன்ற கூட்டத்தில் ஓன் ஹபீஸ் சுட்டிக் காட்டினார்.
இரு நாடுகளுக்கு இடையில் நீடிக்கும் அந்த நெரிசல் விவகாரத்திற்கு முழுமையாக தீர்வுக் காணப்படும் வரையில் முயற்சியை கைவிடப்போவதில்லை என அவர் குறிப்பிட்டார்.
வாழ்வாதாரத்தை தேடி நாள் தோறும் சுமார் மூன்று லட்சத்துக்கும் அதிகமான மலேசியர்கள் அவ்விரு நுழைவாயில்கள் வழியாக சிங்கப்பூர் சென்று திரும்புகின்றனர்.
அவர்களின் குடும்பங்களையும் சேர்த்து கணக்கிட்டு பார்க்கும் போது, அந்த நெரிசல் பிரச்சனையால், ஜொகூரை சேர்ந்த 12 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த எண்ணிக்கை, ஜொகூரின் மொத்த மக்கட் தொகையில் 30 விழுக்காடு ஆகும்.
குடும்பத்தாருடன் இருக்க வேண்டிய நேரத்தை அவர்கள் நெரிசலில் செலவிடுகின்றனர். அதே சமயம் ஜொகூர் பொருளாதார வளர்ச்சியை உந்தச் செய்ய அந்த நெரிசல் பிரச்சனைக்கு தீர்வுக் காண்பது அவசியமென ஓன் ஹபீஸ் குறிப்பிட்டார்.
