
🔊To listen to this news in Tamil, Please select the text.
இவ்வாண்டு ஜனவரி முதல் மே வரை 2959 சிறார் கொடுமை சம்பவங்களை சமூக நல துறை கையாண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இச்சம்பவங்கள் அனைத்தும் உடல், பாலியல் மற்றும் மனரீதியிலான துன்புறுத்தல்களை உள்ளடக்கியிருப்பதாக அத்துறை தெரிவித்திருக்கிறது.
அதிகபட்சமாக 647 சம்பவங்கள் சிலாங்கூரிலிருந்தும், அதற்கடுத்து 333 புகார்கள் சபாவிலிருந்தும், மூன்றாவது இடத்தில் கோலாலம்பூரிலிருந்து 326 புகார்களும் பெறப்பட்டுள்ளன.
நாட்டில் சிறார் சம்பந்தப்பட்ட துன்புறுத்தல்களை கையாள, 140 குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள், 133 குழந்தைகள் நல குழுக்கள் மற்றும் 142 குழந்தைகள் செயல்பாட்டு மையங்களை பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு நிறுவியிருக்கிறது.
அதே சமயத்தில், புறநகர் மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சு, கல்வி அமைச்சு, போலிஸ் துறையுடன் சேர்ந்து சிறார்கள் துன்புறுத்தல் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒத்துழைத்து வருகிறது.
சிறார்கள் துன்புறுத்தல் தொடர்பான புகாருக்கு மக்கள் Talian Kasihவை 15999 அல்லது வாட்ஸ்அப் மூலம் தொடர்புக் கொள்ளலாம். அல்லது அருகில் உள்ள போலிஸ் நிலையங்களையும் தொடர்புக் கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள்.



