
🔊To listen to this news in Tamil, Please select the text.
வாகன உரிமம் தேர்வில் தேர்ச்சி பெற கையூட்டு வாங்கிய மூன்று பெண்கள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் ஜொகூர் மாநிலத்தில் நிகழ்ந்தது.
கைது செய்யப்பட்டவர்கள் 23 வயது முதல் 34 வயதிற்குட்பட்டவர்களாவர். நேற்று ஜொகூர் மாநில எம்.ஏ.சி.சி அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட மூவரும் கைது செய்யப்பட்டனர்.
வாகன உரிமத்திற்கான முதல் கட்ட கணினி தேர்வில் தேர்ச்சி பெற அவர்கள் சில வேட்பாளர்களிடம் கையூட்டு பெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக ஜொகூர் மாநில ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டத்தோ அஸ்மி அலியாஸ் கூறினார்.
விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மேலும் சில கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் அவர் கோடிக்காட்டினார்.
இந்த சம்பவம் 2009ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய சட்டத்தின் செக்ஷன் 16 உட்பிரிவு ஏ யின் கீழ் விசாரிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
