
🔊To listen to this news in Tamil, Please select the text.
நிகழும் மங்களகரமான குரோதி ஆண்டு சித்திரைத் திங்கள் 18-ஆம் நாள்-01.05.2024, புதன்கிழமை, (மலேசிய வாக்கிய பஞ்சாங்க நேரப்படி) முன் இரவு 7:40 மணி அளவில் திருவோண நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நந்நாளில், வியாழன் என்னும் குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார்.
சோதிட சாத்திரத்தில் சுபகிரகம் என்ற பெருமையைப் பெற்ற ஒரே கோள், குரு பகவான் என்னும் வியாழன். தேவர்களுக்கு எல்லாம் தலைவன் குரு பகவான். மனித வாழ்வில் பொருட்செல்வமும் மக்கட்செல்வமும் முக்கியமான 2 அம்சங்கள் ஆகும். இந்த இரண்டையும் அளிக்க கூடிய வல்லமை குருவிற்கு உண்டு. தவிர, ஞானம், பதவி, மணவாழ்க்கை போன்றவை குருவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவை. குருவின் அருள் இருந்தால் இவற்றில் குறை இருக்காது.

இத்தகைய பெருமையும் வலிமையும் மிக்க குரு எந்த இடத்தை பார்க்கிறாரோ அந்த இடம் வலிமை-வளர்ச்சியைப் பெறுகிறது. குருவுக்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது குரு இருக்கும் இடத்தில் இருந்தே 5,7,9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். ஐந்தாம் பார்வையும், ஒன்பதாம் பார்வையும் சிறப்பானவை.
அந்த வகையில், குரு பகவான் இருக்கும் இடத்தைவிட, அவர் பார்க்கும் இடத்திற்கு பிராப்தமும் பலமும் அதிகம். எனமே குருவின் பார்வை பெறும் ராசிகள் பூரண பலனைப் பெறும் என்பதை மலேசியவாழ் இந்துப் பெருமக்களுக்கு இந்து சங்கம் அறிவிக்கிறது.
