
மலேசிய இந்து சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் டத்தோ மோகன் ஷான் மலேசிய இந்து ஆலயங்களுக்கு வழங்கப்பட்ட அரசாங்க மானியத்தை ஆலயங்களுக்கு முறையாகப் பங்கிட்டுக் கொடுக்க இயலாமல் மீண்டும் அரசாங்கத்திற்கே திருப்பிக் கொடுத்திருக்கும் விவகாரம் சமூக ஊடகங்களில் சர்ச்சையாக உருவெடுத்திருக்கிறது.
கடந்த ஆண்டு மித்ராவுக்கு விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்து மில்லியன் கணக்கான ரிங்கிட்டை மலேசிய இந்து சங்கம் பல இந்து ஆலயங்களுக்கான மேம்பாட்டு நிதியாகப் பெற்றது.
உண்மையில் இது பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான்.
ஆனால், அவ்வாறு பெறப்பட்ட நிதியிலிருந்து 1 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகையைப் பயன்படுத்தாமல் மீண்டும் மித்ராவுக்கே திருப்பி அனுப்பியிருக்கிறார் மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் மோகன் ஷான்.
அரசாங்கம் எங்களுக்குப் போதிய உதவிகள் செய்வதில்லை என இந்திய சமூகத்தில் பலமுறை கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன. இந்து ஆலயங்களுக்கு போதிய உதவிகள் கிடைப்பதில்லை என்றும் குறைகூறல்கள் அடிக்கடி எழுகின்றன.
அதிலும் தற்போது கோவிட்-19 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைகளால் பல ஆலயங்கள் பக்தர்களின் வருகையின்றி சிரமத்தில் இயங்குகின்றன. அதனால் ஆலயங்களைப் பராமரிப்பதற்கும், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கும் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக பல ஆலயங்கள் புகார் கூறியுள்ளன.
1 மில்லியன் ரிங்கிட் பணத்தை திருப்பி அனுப்பினால் அதனால் ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்திற்குத்தான் இழப்பு என்று கூறப்படுகிறது.
