
🔊To listen to this news in Tamil, Please select the text.
வங்கதேசத்தில் வாழ்கின்ற சிறுபான்மை மக்களின் உயிரையும உடைமையை-யும் பாதுகாப்பது அந்த நாட்டின் இடைக்கால ஆட்சிக்கு முதற்கடமையாக இருக்க வேண்டும் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தேசியத் தலைவர் பொன்.வேதமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
மலேசிய அரசியல் தலைவர்கள், மனித உரிமை வழக்கறிஞர்கள், அரசுசாரா அமைப்பினர் ஆகியோரின் சார்பில் வங்கதேச இடைக்கால ஆட்சியாளர் பேராசிரியர் முகமது யூனுசிற்கு கடந்தவாரம் அனுப்பியுள்ள அவசரக் கடிதத்தில் ஹிண்ட்ராப் பேரியக்கத் தலைவருமான பொன்.வேதமூர்த்தி மேற்கண்ட கோரிக்கையை எழுப்பியுள்ளார்.
பேரளவிலான மாணவர் போராட்டத்திற்குப்பின் அந்த மக்கள் குடியரசு நாட்டிற்கு தலைமையேற்றுள்ள முகமது யூனுசிற்கு, முதற்கண் வாழ்த்து தெரிவித்துள்ள பொன். வேதமூர்த்தி, அங்கு அமைதியும் இயல்பு நிலையும் திரும்ப வாழ்த்துவதாக மேலும் தெரிவித்துள்ளார்.
ஆனாலும், மிகவும் குறைந்த எண்ணிக்கையில வாழும் சிறுபான்மை மக்களான இந்துக்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் பௌத்த சமய மக்கள்மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெறுவதன் தொடர்பில் அங்கிருந்து வரும் செய்தியும் காணொளிக் காட்சிகளும் மிகுந்த வேதனையை அளிக்கின்றன.
இதன் தொடர்பில், ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜூலியன் லெஸ்ஸர்கூட கான்பெரா நாடாளுமன்றத்தில் ஆகஸ்ட் 14-ஆம் நாள் குரலெழுப்பி உள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் வங்கதேச இடைக்கால ஆட்சியாளர் முகமது யூனுசைச் சந்திக்க நேரம் ஒதுக்கும்படி அவருக்கு அனுப்பியுள்ள அவசரக் கடிதத்தில் பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
மலேசியத் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அரசுசாரா அமைப்பினர் ஆகியோருடன் அங்குள்ள சிறுபான்மை மக்களை சந்திக்கவும் பாதிப்புக்கப்பட்ட இடங்களைப் பார்வையிடவும் நல்லெண்ண அடிப்படையில் உடன் அனுமதி அளிக்கும்படியும் அக்கடிதத்தில் பொன்.வேதமுர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.



