
தாய்லாந்தின் நாரதிவாட் மாநிலத்தில் உள்ள டாக் பாய் (Tak Bai) எல்லை நகரில் இன்று பிற்பகல் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் இரண்டு மலேசியர்கள் காயமடைந்துள்ளனர்.
கிளந்தான் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ யூசோப் மாமாட் கூறுகையில், பிற்பகல் 12.40 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவித்தார். அப்போது, பாதிக்கப்பட்டவர்கள் மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார்.
38 மற்றும் 45 வயதுடைய இருவருக்கும் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், அவர்கள் பயணித்த வாகனமும் வெடிப்பில் சேதமடைந்துள்ளது. இருவரும் தற்போது நாரதிவாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சம்பவம் நடந்தபோது வாகனத்தில் மொத்தம் மூவர் இருந்ததாகவும், மற்றொரு பயணி எவ்வித காயமுமின்றி உயிர் தப்பியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து தாய்லாந்து பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



