
🔊To listen to this news in Tamil, Please select the text.
குளுவாங், செப்.08:
தேசிய அரசியல், தற்பொழுது நாட்டின் தென்புலத்தில் மையம் கொண்டுள்ளது. செப்டம்பர் 28-ஆம்.நாள் ஜோகூர் மாநிலத்தின் மக்கோத்தா சட்டமன்றத் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத் தேர்தல் தொடர்பில் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மஇகா மத்திய செயலவை உறுப்பினரும் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் அவர்களின் ஊடகச் செயலரும் தனிச்செயலாளருமான சிவசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

தேசிய முன்னணியின் கோட்டையான மக்கோத்தா தொகுதியில் களம் இறங்கவுள்ள அம்னோவின் வேட்பாளர் வெற்றிபெறுவார் என்பதை கள நிலவரம் தெரிவித்தாலும் அதை உறுதிசெய்வதற்காக மஇகா இப்போதேக் களத்தில் குதித்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தேசியத் தலைவர் மற்றும் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ மு. சரவணன் ஆகியோரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் மஇகா தேர்தல் இயந்திரத்தை முடுக்கிவிடும் வகையில் மக்கோத்தா தொகுதிக்கு வந்துள்ளதாக குளுவாங் நகரில் இருந்து சிவசுப்பிரமணியம் நேற்று தெரிவித்தார்.

மக்கோத்தா தொகுதியில் உள்ள 5,144 இந்திய வாக்காளர்களை முன்கூட்டியே சந்திக்கவும் அவர்கள் அனைவரின் ஆதரவையும் தேசிய முன்னணிக்கு ஒருமுகமாகத் திரட்டவும் மலேசிய இந்தியர்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக தேசிய முன்னணியும் தேசிய முன்னணியின் மூத்த உறுப்புக் கட்சியான மஇகா-வும் இதுவரை ஆற்றியுள்ள சேவைகளை பிரச்சார களத்தில் எடுத்துச் சொல்லவும், குறிப்பாக மஇகா வட்டாரத் தலைவர்கள் மகளிர்-இளைஞர் பிரிவு பிரிவினரை ஒருங்கிணைக்கவும் குளுவாங் நகருக்கு வந்துள்ளதாக சிவசுப்பிரமணியம் மேலும் தெரிவித்துள்ளார்.
