
பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஷியா (Shia) கொள்கை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 226 வெளிநாட்டுப் பிரஜைகள் மீது சிலாங்கூர் மாநில இஸ்லாமிய விவகாரத் துறையான (JAIS) விசாரணை மேற்கொண்டு வருகிறது.
கடந்த வியாழக்கிழமை, JAIS, போலீஸ் மற்றும் குடிநுழைவு இலாகா உள்ளிட்ட சுமார் 120 அதிகாரிகள் இணைந்து Pusat Perdagangan Lagoon Perdana வளாகத்தில் திடீர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் பாகிஸ்தான், இந்தியா மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த 147 ஆண்கள், 51 பெண்கள் மற்றும் 28 குழந்தைகள் உட்பட மொத்தம் 226 வெளிநாட்டினர் அங்கு இருப்பது கண்டறியப்பட்டது.
மலேசியாவின் அதிகாரப்பூர்வ இஸ்லாமிய போதனை மற்றும் ஷரியா சட்டக் கொள்கைகளுக்கு முரணான ஷியா போதனைகளைப் பரப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், சிலாங்கூர் ஷரியா குற்றவியல் சட்டத்தின் கீழ் JAIS விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இதனிடையே, சம்பந்தப்பட்ட வளாகத்தில் சட்டவிரோதமாக மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறி, சுபாங் ஜெயா மாநகர மன்றம் (MBSJ) கட்டிட உரிமையாளருக்கு 14 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உள்ளூர் இஸ்லாமிய சட்டங்களுக்கு முரணான கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம் என JAIS எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் இருப்பின், தங்களது ஹாட்லைன் எண்ணின் மூலம் அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.



