
-நக்கீரன்
கோலாலம்பூர், அக்.06:
மலேசியத் தமிழ்ப் பள்ளி வரலாற்றில் இன்று அக்டோபர் 06-ஆம் நாள் இன்னொரு புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
அந்நாளைய தேசிய முன்னணி அரசையும் இந்நாளைய ஒற்றுமை அரசாங்கத்தையும் இணைத்த நாட்டின் 530-ஆவது தமிழ்ப் பள்ளியை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தொடக்கிவைத்த வரலாற்றுச் சம்பவம்தான் அது.
இந்திய சமுதாயத்தின் குறிப்பாக தமிழர்களின் கல்வி மேம்பாட்டில் அக்கறை கொண்ட இரு ‘துன்’ தலைவர்களில் ஒருவரான வீ.தி. சம்பந்தன் சொந்த செலவில் சொந்த நிலத்தில் உருவாக்கிய மகாத்மா காந்தி தமிழ்ப் பாடசாலையை மலேசிய இந்தியர் காங்கிரஸ் உருவாக்கத்திற்கு அதிகாரப்பூர்வ கடிதத்தை அளித்த இந்திய தேசிய காங்கிரஸ் கடையின் அந்நாளையத் தலைவரும் இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேருவின் சகோதரி பண்டித விஜயலெட்சுமி 1956-இல் தொடக்கி வைத்தார்.
இன்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் உரிமத்துடன் ஒப்புதல் அளித்த ஈ வூட் தமிழ்ப் பள்ளியை இன்றைய பிரதமர் அன்வார் தொடங்கிவைத்தார். இவர் தொடங்கி வைத்த முதல் தமிழ்ப் பள்ளியும் இதுதான்.
5.7 ஏக்கர் நிலத்தில் நவீன வசதிகளுடன் இப்பள்ளி உருவாகி உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.
ம.இ.கா. முன்னாள் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ சுப்ரா அடிக்கல் நாட்டிய இப்பள்ளியின் வளர்ச்சியில், இந்நாளைய தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச. விக்னேஸ்வரன் அதிகமாக பாடுபட்டார் என்பது இப்பள்ளியின் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
