
இம்மாதம் 10ஆம் தேதி வரை நடைபெறும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பர் என சிலாங்கூர் மாநில அரசு எதிர்பார்க்கிறது.
நேற்று வரை 46 சட்டமன்றத் தொகுதிகளில் இந்த பரிசோதனை இயக்கம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது 91,586 பேர் பங்கேற்று பயனடைந்துள்ளதாக சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
இதுவரை பரிசோதனை செய்யப்பட்டவர்களில் 3,237 பேர் நோய்த் தொற்றுக்கான அறிகுறியை கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் மேலும் சொன்னார்.
வரும் ஜூன் 10ஆம் தேதி வரை மேலும் எட்டு தொகுதிகளில் இந்த பரிசோதனை இயக்கத்தை நடத்தவுள்ளோம். நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்திலும் அதிகமானோர் இந்த பரிசோதனையில் கலந்து கொள்வது இந்த முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறோம் என்றார் அவர்.
