
🔊To listen to this news in Tamil, Please select the text.
தீபாவளித் திருநாள் இம்மாதம் 31ஆம் தேதி கொண்டாட உள்ள அனைத்து இந்துப் பெருமக்களும் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து விட்டு, அதில் அலங்காரங்களையும், அழகுப் பொருட்களும் தொங்கவிடுவதும் மேலும், அன்றைய திருவிழா தினத்தில் அருசுவை மிகுந்த உணவுகளும் தயார் செய்து இன்ப சுவையோடு உண்டு மகிழ்வதும் வழக்கமான செயல்களே.
இந்த திருவிழா காலத்தில் இந்தியர்களுக்கு தேவைப்படும் வீட்டுப் பொருட்களை பினாங்கு ‘லிட்டில் இந்தியா’ சந்தையில் வாங்கச் சென்ற போதுதான் காத்திருந்தது பெரும் அதிர்ச்சி.
அனைத்துப் பொருட்களின் விலைகளும் கடும் ஏற்றம் கண்டுள்ளன என்று தெரிய வந்தது.
அண்மையில் பினாங்கு இந்து இயக்கத்திற்கு கிடைத்த பலதரப்பட்ட புகார்களை தொடர்ந்து இயக்கப் பொறுப்பாளர்கள் கடைகளில் மேற்கொண்ட தேடலில் இந்த விலை ஏற்றம் உண்மையென அறிய முடிந்தது.
இந்த விலை ஏற்றம் சென்ற ஆண்டைவிட இவ்வாண்டு மேலும் பல மடங்கு விலை ஏற்றம் கண்டுள்ளது.
குறிப்பாக இங்கு இறக்குமதியாகும் சமையல் பொருட்கள் வழக்கத்திற்கு மாறான விலையில் ஏற்றம் கண்டுள்ளன.
மக்களின் வாழ்வாதாரம் அதிக சுமைகளோடும், எதிர்பார்ப்புகளோடும் உள்ள இக் கால கட்டத்தில் பண்டிகைக் காலத்தில் வியாபாரிகள் அதிக லாப வைத்து விற்பது கண்கூடாக தெரிந்தது.
கீழ்க் காணும் விலைப் பட்டியலில் சென்ற ஆண்டைவிட இவ்வாண்டு விலை ஏற்றத்தை ஒப்பிடலாம்.
அதிலும் சில பொருட்கள் ‘நூறு விழுக்காடு’ விலை ஏற்றம் கண்டுள்ளது ‘ஏலக்காய்’
கடந்தாண்டு இதே காலகட்டத்தில் ஒரு கிலோ விலை 40 ரிங்கிட். ஆனால், தற்போது அதன் விலை 140 ரிங்கிட்.
6 ரிங்கிட்டிற்கு விற்கப்பட்ட பூண்டு தற்போது ஏறக்குறைய 14 ரிங்கிட்டிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆகவே, இந்த விலை ஏற்றம் குறித்து அரசாங்கமும் அமலாக்கத்துறை அதிகாரிகளும் நன்கு பரிசீலித்து அதற்கான தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பினாங்கு இந்து இயக்கத் தலைவர்
டத்தோ ப.முருகையா
கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், பண்டிகைக் காலங்களில் இந்துக்கள் நன்கு திட்டமிட்டு பொருட்கள் வாங்குவதும், அனாவசியச் செலவுகள் செய்யாமல் வீட்டுச் செலவுகளை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்துக் கொண்டு பண்டிகைகளைக் கொண்டாட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.



