
உலகம் முழுவதும் வாழ்கின்ற இந்துப் பெருமக்கள் தீபத் திருநாளைக் கொண்டாடி மகிழ்ந்திட குதூகலம்மிகக் காத்திருக்கும் இந்த வேளையில், இந்த மலைத்திருநாட்டில் வாழ்கின்ற இந்துக்களும் ஒளிவெள்ளத் திருநாளைக் கொண்டாடி மகிழ்ந்திட அணியமாகி வருகின்றனர்.
இந்து சமயத்தின் முக்கியப் பண்டிகையைக் கொண்டாடுவது மட்டும் நம் நோக்கமாக இருந்துவிடாமல், இந்துப் பெருமக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தும் திருநாளாகவும் இந்நந்நாளைக் கருத வேண்டிய கட்டாயமும் கடப்பாடும் நமக்குண்டு.
சிறுபான்மைச் சமுதாயாமாக இருப்பதால், பல்வேறு மருட்டலையும் அச்சுறுத்தலையும் நம் மக்கள் எதிர்கொள்கின்றனர். இதை சமாளிக்கவும் வெற்றிகொள்ளவும் துணையாக இருப்பது நாம் கட்டிக்காக்கும் ஒற்றுமைதான்.
இந்துக்களை வளைத்து மதமாற்றும் நடவடிக்கை, இந்து சமயத்திற்கு எதிரான அவதூறு போன்றவற்றை நாம் காலமெல்லாம் எதிர்கொண்டு வருகிறோம். சமய-சமூக அடிப்படையில் இப்படி நாம் சங்கடத்தை எதிர்கொள்ளும் அதேவேளை, அத்யாவசிய பண்டங்கள் உட்பட அனைத்துப் பொருடகளின் விலை அதிகரிப்பால், வாழ்க்கை சுமையும் அதிகரித்து விட்டது.
இருந்தாலும் சீரான சிக்கன முறையில் நம்முடைய சமய பாரம்பரித்தைத் தற்காக்கவும் நம்மிலும் நலிந்தோருக்கு உதவிக்கரம் நீட்டி அவர்களையும் இந்து நீரோட்டத்தில் இருந்து விடுபடாமல் அரவணைக்க வேண்டிய அருங்கடமையும் ஒவ்வொரு இந்துவுக்கும் உண்டு என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
இந்தப் பண்டிகைக் காலத்தில் இல்லந்தோறும் துளிர்க்கும் இன்பமும் குதூகலமும் அனைவரின் உள்ளத்திலும் ஒளிவெள்ளமாகப் பெருக்கெடுத்து எந்நாளும் நிலைபெறவும், மலேசிய இந்துக்களின் ஒற்றுமையும் வலிமையும் மேலும் ஓங்கிடவும் எல்லாம்வல்ல எம்பெருமான் அருள் வழங்கும்படி அவன்தாள் பணிகிறேன்.
வாழ்க இந்து சமயம்; வளர்க இந்து சமுதாயம்!
இக்கண்
கணேஷ் பாபு
தேசிய துணைத் தலைவர்
மலேசிய இந்து சங்கம்.
