
கேஎல்ஐஏ விமான நிலையங்களில் மலேசிய ஐயப்ப பக்தர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க போக்குவரத்து அமைச்சு ஒப்புதல் வழங்கியுள்ளது.
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் இதனை கூறினார்.
ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட ஐயப்பப பக்தர்கள் சபரிமலைக்கு செல்கின்றனர்.
இப்பக்தர்கள் இந்தியாவுக்கு செல்லும் போது கேஎல்ஐஏ விமான நிலையங்களில் ஒரு சில பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
ஆகையால் விமான நிலையத்தில் பக்தர்களுக்கு சிறப்பு வழியை அமைத்து தர வேண்டும் என மலேசிய ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கத்தின் தலைவர் யுவராஜா குருசாமி கோரிக்கையை முன்வைத்தார்.
இக்கோரிக்கையை போக்குவரத்து அமைச்சின் பார்வைக்கு கொண்டு சென்றேன்.
இதன் அடிப்படையில் அமைச்சின் சிறப்பு செயலாளர் முகமத் ரிட்சுவான் தலைமையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
அமைச்சின் அதிகாரிகள், மலேசிய ஏர்போர்ட் வாரிய அதிகாரிகள், விமான நிறுவன அதிகாரிகள், குடிநுழைவுத் துறை அதிகாரிகள் உட்பட பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
குறிப்பாக ஐயப்ப பக்தர்களுக்கு விமான நிலையத்தில் காத்திருப்பதற்கு சிறப்பு இடம் ஒதுக்கப்படும்.
அதே வேளையில் சோதனையிடங்களும் அவர்களுக்கு சிறப்பு இடம் வழங்கப்படவுள்ளது.
உம்ரா, ஹாஜ் யாத்திரைக்கு செல்பவர்கள் போல் ஐயப்ப பக்தர்களுக்கும் உரிய வசதிகள் செய்து தரப்படும்.
இவ்வாண்டை தொடர்ந்து வரும் ஆண்டுகளில் இந்த சலுகைகள் மேலும் சிறப்பான முறையில் செய்து தரப்படும் என போக்குவரத்து துறை அமைச்சு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த வாய்ப்பை மலேசிய ஐயப்ப பக்தர்கள் முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
குறிப்பாக அனைத்து பக்தர்களும் ஒற்றுமையாக யாத்திரியை மேற்கொள்ள வேண்டும் என குணராஜ் வலியுறுத்தினார்.
