
மும்பை பயங்கரவாத தாக்குதலின் முக்கிய குற்றவாளியான தஹாவூர் ராணாவை, இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க உச்ச நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது.
மஹாராஷ்டிராவின் மும்பையில், 2008ம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், ஆறு அமெரிக்கர்கள் உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலை திட்டமிட்டவர்களில், நம் அண்டை நாடான பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான டேவிட் கோல்மேன் ஹெட்லியும் ஒருவர்.
பயங்கரவாதியான இவருக்கும், இந்த தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் – இ – தொய்பா அமைப்புக்கும் உதவியதாக பாக்., வம்சாவளியைச் சேர்ந்த வரும் வட அமெரிக்க நாடான கனடாவைச் சேர்ந்த தொழிலதிபருமான தஹாவூர் ராணா மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
மும்பை தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கில், கடந்த 2013ல் ராணாவுக்கு 14 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், ராணாவை நாடு கடத்தக் கோரி அமெரிக்காவிடம் நம் நாட்டு அரசு கோரிக்கை வைத்தது.
