
மலேசிய – இந்தியா இடையே உள்ள தொழில் வர்த்தக வாய்ப்புகளை இளைய சமுதாயம் சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று மலேசிய நகரத்தார் சங்கத்தின் தலைவர் டத்தோ இராமநாதன் கேட்டுக் கொண்டார்.
பிரதமர் மோடி தலைமையில் இன்று உலக அளவில் இந்தியா தொழில் வர்த்தக துறையில் முன்னேறி வருகிறது.
இந்தியாவில் என்னென்ன தொழில் வாய்ப்புகள் இருக்கிறது என்பதை அறிந்து அதற்கேற்ப நமது இளைஞர்கள் அதில் பங்கேற்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இன்று கோலாலம்பூர் செந்தூல் தண்டாயுதபாணி ஆலய மண்டபத்தில் மலேசிய நகரத்தார் வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் வர்த்தக மாநாடு மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
இந்த மாநாட்டில் தலைமையுரை ஆற்றிய டத்தோ இராமநாதன், இந்திய – மலேசிய இடையே உள்ள தொழில் வர்த்தக வாய்ப்புகள் குறித்து விரிவாக பேசினார்.
தொழில் வர்த்தக துறையில் நகரத்தார் பல ஆண்டுகளாக வெற்றி நடை போட்டு வருகிறார்கள்.
கல்வி, கட்டுமானம் மற்றும் வர்த்தக துறையில் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சிறந்து விளங்குகிறார்கள்.
அந்த வகையில் மலேசியாவில் உள்ள நகரத்தார்கள் குறிப்பாக தங்களது வர்த்தக வாய்ப்புகளை மேலும் வலுப்படுத்தி கொள்ள முன் வரும் வேண்டும்.
அதன் அடிப்படையில் மலேசிய இந்திய இடையே உள்ள தொழில் வர்த்தக வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

1 லட்சத்து 20,000 க்கும் மேற்பட்ட நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பல தொழில் துறைகளில் உள்ளனர்.
இதில் அதிகளவில் இளைஞர்கள் பங்கேற்க வேண்டும்.
அந்த நோக்கத்திற்காக மீண்டும் மலேசியாவில் வர்த்தக மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளோம்.
கடந்த 2023 ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் உலக வர்த்தக மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினோம்.
இதன் பலனாக மீண்டும் இன்று கோலாலம்பூரில் வர்த்தக மாநாட்டை நடத்தி இருக்கிறோம் என்று அவர் சொன்னார்.
மலேசியாவுக்கான இந்தியா தூதர் பி.என். ரெட்டி, ஒற்றுமை துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, கட்டுமான தொழில் முனைவர் டத்தோ காசி, செந்தூல் தண்டாயுதபாணி ஆலய தலைவர் டத்தோ கிருஷ்ணன், ஆலய செயலாளர் மெய்யப்பன்,தண்ணீர் மலை செட்டியார், பினாங்கு டத்தோ இராமநாதன் , டத்தோஸ்ரீ தேவமணி, டத்தோ பாஸ்கரன், டாக்டர் கானா உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
