
2024 ஆம் ஆண்டிற்கான எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தில் பயின்ற மாணவர்கள் சிறப்பான தேர்ச்சி பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.
திவ்யாஷினி பாகன் 11ஏ, மோகனபிரியா சுப்பிரமணியம் 7ஏ, வாசுதேவன் சிவாநந்தா 7ஏ, மிர்ஷாலினி சுப்பிரமணியம் 7ஏ, கலையரசி முகுந்தன் 7ஏ, ரோஷன் 6ஏ மற்றும் அஸ்மிதா ஜெகநாதர் 6ஏ ஆகிய மாணவர்கள் சிறந்து விளங்கினர். இதே lபோன்று நாடு முழுவதும் பல மாணவர்கள் சிறப்பாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இது தொடர்பாக பெட்டாலிங்ஜெயா ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில், இணை இயக்குநர் சுரேன் கந்தா உரையாற்றினார்.
அவர் கூறும் போது, “இந்த சாதனைகள் சிறந்த கல்விப் பயிற்சி மற்றும் முன்கூட்டிய திட்டமிடலின் விளைவே ஆகும். ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் தேர்வு முடிவை மட்டுமல்ல, மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது,” என்றார்.

மேலும், “மாணவர்கள் அடுத்து உயர் கல்வியிலும் சாதிக்க வேண்டும். அவர்கள் மெட்ரிகுலேசன் வாயிலாக அரசு பல்கலைக்கழகங்களில் சேர்வதற்காக விண்ணப்பிக்க உள்ளனர். இதற்காக அனைத்து தகுதியான மாணவர்களுக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். கல்வியில் இன ரீதியிலான பாகுபாடுகள் எந்த விதத்திலும் அனுமதிக்கப்படக் கூடாது,” என்று அவர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களும் பெற்றோர்களும் தனது கருத்துகளுக்கு ஆதரவை தெரிவித்தனர். மாணவர்கள் சிறந்த துறைகளை தேர்வு செய்து எதிர்காலத்தில் உயர்ந்த நிலைகளை அடைய வேண்டும் என்பதே ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் மனப்போக்காக இருப்பதாக சுரேன் கந்தா தனது உரையை முடித்தார்.
