
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் சீர்திருத்த முயற்சிகள் மற்றும் மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கைகள் தொடர வேண்டும் என செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் வலியுறுத்தினார்.
அவர் கூறுகையில்,
“பிரதமர் பதவியேற்றதிலிருந்து ஊக்கமில்லாத, பலவீனமான நிர்வாக சூழ்நிலைகளை சந்தித்து, கொவிட் தொற்றுநோய்க்குப் பிறகு சீர்குலைந்த பொருளாதாரத்தை மீள எழுப்ப போராடி வருகிறார்.”
அவரது தலைமையில் ஏற்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள், நிர்வாக சீர்திருத்தம், மக்களுக்கு நேரடியாக பயன் தரும் திட்டங்கள் ஆகியவை புதிய அடையாளங்களாக மாற்றம் கொண்டு வந்துள்ளன.
தற்போது நாடு மற்றொரு அரசியல் குழப்ப நிலைக்குள் நுழைவதைத் தவிர்க்க வேண்டும் என்றும்,
“புதிய நிர்வாகத்துடன் மீண்டும் தொடங்குவது பல ஆபத்துகளை ஏற்படுத்தும். இருப்பது போதுமானது. அதை வலுப்படுத்துவதே தேவை”
என்று அவர் சுட்டிக்காட்டினார்.
குணராஜ் மேலும் தெரிவித்ததாவது:
“துனிச்சலான முடிவுகள், வலுவான சர்வதேச உறவுகள், முதலீட்டாளர் நம்பிக்கை, நிதிப்பொறுப்பு, சமூகநீதி ஆகியவற்றை நாமே இப்போதெல்லாம் கண்ணால் காண்கிறோம். இது ஒரு சாதனை.”
மடானி பொருளாதார திட்டம் பில்லியன் கணக்கான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்திருப்பதோடு, STR, SARA போன்ற சமூக பாதுகாப்புத் திட்டங்கள் நேரடியாகக் குறிவைக்கும் மக்களுக்கு நன்மையளித்து வருவதாகவும் அவர் சுட்டினார்.
கல்வி, சுகாதாரம், இலக்கு மானியங்கள், நீண்டகால தேசிய நலனை மையமாகக் கொண்ட திட்டங்கள் — இவை அனைத்தும் தொடர வேண்டும்.
“இப்போது மாற்றத்தை தேடுவது, தொடங்கிய முயற்சிகளை தடம்புரளச் செய்வதுடன் மக்களுக்கு கூடுதல் சுமைகளை ஏற்படுத்தும்,”
எனக் கூறிய குணராஜ்,
“மலேசியாவுக்கு இன்னொரு மறுசீரமைப்பு தேவையில்லை. இப்போது தேவை தீர்வு மட்டுமே”
என வலியுறுத்தினார்.
