
பல ஆண்டுகளாக சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்த சமூக சேவகரும், புரட்சி அமைப்பின் தோற்றுநருமான உமாகாந்தன், தற்போது தனது சமுதாயத்தின் தலையெழுத்தை மாற்ற அரசியலுக்குள் வருவதாக தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
“இந்தியர்களின் பிரச்சினைகள் இந்நாட்டில் இன்று வரை தீர்க்கப்படவில்லை. சமுதாயத்தின் குரலாக இருப்போம் என சொல்லிக்கொண்டிருந்த தலைவர்கள், இன்று ஆட்சியில் அமர்ந்தபின் மௌனம் காத்து வருகிறார்கள். நம் சமுதாயத்தின் தேவைகள் பற்றி எந்தக் கவலையும் அவர்களுக்கு இல்லை. வாய் பேச்சில் வீரர்களாக இருந்தாலும், நடைமுறையில் எதையும் சாதிக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
எனவே, சமுதாயத்திற்கு எதையும் செய்யாத தலைவர்களைப் பற்றி பேசுவதை விடுத்து, நாங்களே சமுதாயத்திற்கு சேவையாற்றவும், நம் தேவைகளை கேட்டு பெறவும் அரசியல் களத்தில் கால் பதிக்கிறோம்” என அவர் வலியுறுத்தினார்.
மேலும், கடந்த பல ஆண்டுகளாக ஸ்ரீ மூடா பகுதியில் நீடித்து வரும் வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு காண அரசியல் தலைவர்கள் எவரும் போராடவில்லை என்றும், மக்கள் ஒன்றுபட்டு குரல் கொடுத்தாலே தற்காலிக தீர்வுகள் கிடைக்கின்றன என்றும் சாடினார்.
“இதனால், நாங்கள் இளைஞர்கள் தற்போது மலேசிய இந்திய மக்கள் கட்சியில் (MIBP) இணைந்து, அரசியல் களத்தில் களமிறங்கி எங்களின் பிரச்சினைகளை நாமே சரி செய்யத் தயாராகியுள்ளோம்” என அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், இன்று எம்ஐபிபி கட்சியின் கோத்தா ராஜா தொகுதி கிளை தொடக்க விழா நடைபெற்றது. இதில் கோத்தா கெமுனிங், செந்தோசா, சுங்கை கண்டீஸ் ஆகிய மூன்று சட்டமன்ற பிரிவுகளும் உருவாக்கப்பட்டன.
