
பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலங்காலமாக வியாபாரம் செய்து வரும் சிறு வியாபாரிகள் இப்போது தத்தளிக்கிறார்கள்.
அவர்கள் வியாபாரம் செய்ய ஏன் முறையான ஏற்பாடுகள் செய்து கொடுக்கவில்லை என்று பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா கேள்வியை எழுப்பினார்.
இம்முறை பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா தீபாவளி கடை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா மெயின் ரோட்டில் கடைகளை அமைத்தது ஏன் என்பதையும், போக்குவரத்து நெரிசலில் மக்கள் தவிக்கும் வேளையில் இந்த கடைகளால் மேலும் மோசமான நெரிசல் ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பல ஆண்டுகளாக இங்கு வியாபாரம் செய்து வரும் சிறு வியாபாரிகளுக்கு கடைகள் வழங்கப்படவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. உள்ளூர் வியாபாரிகளை புறக்கணித்து மற்றவர்களுக்கு கடைகள் கொடுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
“விலாயா மாநில முன்னாள் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் மற்றும் என்னையும் அழைத்து பேசி ஆலோசனை கேட்டிருக்கலாம், ஆனால் அதுவும் செய்யப்படவில்லை. ஒரு பகுதி ரோட்டை அடைத்து கடைகளை அமைத்தது முறையல்ல,” என்று டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்துள்ளார்.
“இன்னும் காலம் கடந்து விடவில்லை, அனைத்தையும் முறைப்படுத்துங்கள். முறையான ஏற்பாடுகளை செய்திருந்தால் இவ்வளவு பிரச்சினை எழாது. விடுபட்ட வியாபாரிகளுக்கும் கடைகள் ஏற்படுத்திக் கொடுங்கள்,” என்று அவர் கேட்டுக் கொண்டார்.
பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் தீபாவளி கடை விவகாரம் தொடர்பாக இன்று நடைபெற்ற சந்திப்பில், பிபிபி கட்சியின் விலாயா மாநில தலைவர் சத்யா சுதாகரன், செயலாளர் டத்தோ இண்டர்ஜிட், மகளிர் அணி தலைவி புனிதா முனிசாமி, தகவல் பிரிவு தலைவர் ஸ்டீபன், சிகாம்பூட் தொகுதி தலைவர் டத்தோ டாக்டர் வினோத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
