
செய்தி / படங்கள் : எம்.முருகன்
மீனாட்சிபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயம், பக்தர்களால் பெரிதும் போற்றப்படும் புகழ்பெற்ற ஆலயமாக விளங்கி வருகிறது. இவ்வாலயத்தின் காப்புக்கட்டு விழா இந்த ஆண்டும் பக்தி பரவசத்துடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வேண்டி காப்பு கட்டி தங்கள் பக்தியை வெளிப்படுத்தினர். இந்நிகழ்வில் பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு தெய்வ அருளைப் பெற்றனர்.
வரும் பதினெட்டாம் தேதி (புதன்கிழமை) நடைபெறவுள்ள முக்கிய நிகழ்வுகளில் பால்குடம் எடுத்தல், பூக்குழி இறங்குதல், தீச்சட்டி ஏந்துதல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை பக்தர்கள் விரதம் இருந்து நிறைவேற்ற உள்ளனர்.

இந்நிகழ்வை முன்னிட்டு, இதுவரை 30,000-க்கும் மேற்பட்டோர் காப்பு கட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 2 லட்சத்திற்கும் அதிகமான பால்குடங்கள், காவடி, தீச்சட்டி, கரும்புத் தொட்டில் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன்களை பக்தர்கள் ஏற்க உள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொள்வதால், அவர்களின் பாதுகாப்பையும் வசதியையும் கருத்தில் கொண்டு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தேவையான வசதிகள் அனைத்தும் ஆலய நிர்வாகத்தினரால் செய்யப்பட்டுள்ளன.

இந்த திருவிழா, பக்தர்களின் ஆன்மீக உற்சாகத்தையும் அம்மன் மீது கொண்டுள்ள ஆழ்ந்த பக்தியையும் வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்று வருகிறது.
