
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தல் வருகிற 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த தேர்தலில், நடிகராக இருந்து அரசியலுக்கு வந்துள்ள விஜய், தனது புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) சார்பில் முதன்முறையாக தேர்தலை சந்திக்கிறார். அவரது அரசியல் வருகையால் தமிழ்நாடு அரசியல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.
தேர்தலை முன்னிட்டு, த.வெ.க. தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, காரைக்குடியில் போட்டியிடும் டாக்டர் பிரபுவை ஆதரித்து இன்று பிரச்சாரம் செய்ய அவர் வந்தார்.

காலையிலிருந்தே மக்கள் பெருந்திரளாக திரண்டிருந்த நிலையில், தாமதமாக வந்ததால் விஜய் விரிவாக பேச முடியவில்லை. இருந்தாலும், மேடையில் டாக்டர் பிரபுவை அறிமுகப்படுத்தி, “அவருக்கு வாக்களிக்கவும், விசில் சின்னத்தை வெற்றி பெறச் செய்யவும்” என சைகை மூலம் கேட்டுக்கொண்டார்.
மேலும், கட்சித் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
விஜய்யின் வருகையால் காரைக்குடியில் அரசியல் சூழல் உற்சாகமடைந்துள்ளது.
